Monday, 27 January 2025

கரிசல் காவியம்11

கரிசல் மண்ணில் ஒரு. காவியம்.11
பாரதியின் பெண்ணுரிமை.

அத்தியாயம் 11

கமாலாவின் வீட்டு ஆட்கள் எல்லோரும் மருத்துவ மனையில்தான் இருந்தார்கள்.கமாலா தன்னந்தனியேதான் வீட்டில் இருந்தாள்.இந்தத் தனிமைதான் அவளைப் பாடாய்ப்படுத்தியது.அவளுக்குள் எந்த அளவிற்கு அச்சம் நிறைந்திருந்ததோ அந்த அளவிற்கு அவளுக்குள் குற்றஉணர்வும் அவளைக் கொடுமைப்படுத்தியது.

ஆச்சி சொன்னபடி ராஜாவைக் கூப்பிட்டு அவனிடம் வீட்டில் உள்ளவர்கள் என்ன சொல்லியிருந்தார்கள் என்பதை எடுத்துச்சொல்லி
அவனுக்கு எச்சரிக்கை செய்திருந்தால் அவனும் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் தானும் சூதனமாகப் பார்த்து நடந்திருப்பான்.எனப் பலவிதமாக தனக்குள்ளே ஏதேதோ எண்ணி விடை தேடிக் கொண்டிருந்தாள்.

இனி அவனோடு பேச முயன்றால் அது இன்னொரு பிரச்சனையை உருவாக்கிவிடும்.இரண்டு குடும்பங்களுக்கும்  இடையே வெறும் வாய்ச்சண்டை ந்டந்திருந்தால்கூட ஓரளவுக்கு நிலைமை மாறி சமாதானம் ஏற்படவும் வாய்ப்பு இருந்திருக்கலாம்.ஆனால் நிலைமை அப்படியில்லை அடிதடி வீண் வாய்ப் பேச்சு என சண்டை உச்ச கட்டத்தைத் தொட்டுவிட்டது.
எனவே இனி என்ன மேற்கொண்டும் விளையுமோ! எதிர் கால உறவு எப்படி அமையுமோ! என கமலா நேர் எதிர் விளைவுகளை பற்றி மிகவும் விலாசமாகவே சிந்தித்தாள்.

இந்த நிலையில் அவள் இன்னொன்றையும் யோசிக்காமலில்லை.சம வயதுள்ள ஆணும் ஆணும் பழகினாலும் பெண்ணும் பெண்ணும் பழகினாலும் சமுதாயம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் போது ஆணும் பெண்ணும் பழகினால் மட்டும் சமுதாயம் ஏன் ஏற்றுக்கொள்ள அஞ்சுகிறது?சமுதாயத்தைப் பார்த்துத் தனக்குள்ளே கேள்வி கேட்டுக்கொண்டாள்.

யாருடைய கேள்விதான் இச்சமுதாயத்தை இன்றைய அவசரத்திற்கு மாற்றி விடும்?.பெண் விடுதலைப் பற்றிப் பேச இனி எத்தனை பாரதியும் பெரியாரும் பிறந்து வர வேண்டியிருக்குமோ தெரியவில்லையே!பாவிகள் என்னைப் படிக்கவிடாமல் பூட்டி வைத்து விட்டனர்.என் வளர்சியிலும் வாழ்க்கையிலும் என்னை ஏன் சுயமாகச் சிந்திக்கத் தடை போடுகிறார்கள்.
என்னுடைய எதிர்காலம் பற்றி மற்றவர்கள் முடிவு எடுப்பதில் நிசமாகவே என்ன நன்மை ஏற்பட்டுவிடும்?
அது எந்தவிதத்தில் நியாயமுமாகும்?அவரவர் வாழ்வை அவரவர்தான் தீர்மானிக்க வேண்டும்.
அதுதான் சரியாகவும் இருக்கும்.

ஏனிந்த ஆச்சி இப்படி யோசிக்கிறாள்.அம்மாவும் அப்பாவும் கூட ஓரளவுக்கு படித்தவர்கள்.அவர்கள் கொஞ்சம் யோசிக்கிறார்கள்.
ஆனால் இந்த ஆச்சிதான் பழைய பஞ்சாங்கம்.குடும்பம் வீடு என்ற எல்லைகளைக் கடந்து யதார்த்தங்களை பார்க்க பயந்துகொண்டு அவள் இன்னமும் பழமைக்குள் ஒளிந்துகொண்டு வெளியில் வரமறுக்கிறாள்.

யாருக்காகவும் நான் ஏன் என்னுடைய உரிமைகளை விட்டுக்கொடுத்துப் போக
வேண்டும்.எனக்கென எனக்குள்ள உரிமைகள் காத்திருப்பதை நான் ஏன் தட்டிக்கழிக்க வேண்டும்?என நியாயங்களை தனக்குள்ளே நீதிமன்றம் அமைத்துத் தானே வழக்காடுகிறாள்.

அப்போது மேலைக்காற்று சுழட்டி அடிக்கிறது. அலமாரியிலிருந்து ஒரு புத்தகம் படபடத்துக்கொண்டு பறந்துவந்து சில பக்கங்களை விரித்து ஏதோவொரு பக்கத்தை தேர்வுசெய்து விரிப்பதுபோல் விரிக்கின்றது.அதில் பாரதியின் வரிகள் காற்றின் வலிமைக்கு ஈடு கொடுத்து என்னைப் படித்து எழுச்சி பெறுக!மடமை விட்டுக் கடமை உணர்ந்து வெளியே வா!உனக்கான உரிமைகளைத் தட்டிப்பறிக்கப் பிறந்தவர் எவரும்இல்லை.நீ உன்னை எவருக்காகவும் மாற்றிக் கொள்ளவேண்டாம்.

உன்னைத்தான் நான் தேடுகிறேன்.நான் பாடும் புதுமைப்பெண் நீதான்.இதோ என்னை விரி!படி என்பதுபோல் கமலாவின்முன் தன்னை படித்துக்காட்ட புதுமைப் பெண்எனும் பெண்மையாம் கண்ணகியின் வீர உணர்வைத் தட்டி எழுப்பும் வண்ணம் அவனுக்குள் அன்று கனன்ற அந்த விடுதலை உணர்வின் வேகப் பாய்ச்சலில் துடித்துவந்த துள்ளும் உணர்வுள்ள துடிக்கும் வரிகளைப் பளிச்சென அவள் கண்கள் கொத்திக்கொள்ளும் விதத்தில் விரித்துக் காட்டினான் காற்றிலே விசையாகி பறந்துவந்த பாரதி.

வரிகளின் விலாசமே அவளைக் காந்தம்போல் கவர்ந்து ஈர்த்தன.தன் கண்களை அகலவிரித்து அள்ளிப்பருக அனுமதித்தாள்.பாரதியே பாவையாகி கமலாவுக்குள் வந்து புகுந்து கொண்டவனாய் கமலாவை தன் கவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டான் மகா கவி பாரதி.

'"புதுமைப் பெண்
மாதர்க்குண்டு சுதந்திரம் என்றுநின்அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் 
திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிருளாம்.        
அறி யாமையில் அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல்பெண்ணற
மாகுமாம் உரைப்பது கேட்டிரோ!

இவ்வரிகள் அவளை விட்டு விடுதலையாகு எனத்
தூண்டும் ஒளியாய் பிரகாசித்தது.அவளுக்குள் ஒரு
புத்துணர்வு எழுந்து அவளை உசுப்பியது,

(தொடரும்}'


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment