Monday, 27 January 2025

கரிசல் காவியம்11

கரிசல் மண்ணில் ஒரு. காவியம்.11
பாரதியின் பெண்ணுரிமை.

அத்தியாயம் 11

கமாலாவின் வீட்டு ஆட்கள் எல்லோரும் மருத்துவ மனையில்தான் இருந்தார்கள்.கமாலா தன்னந்தனியேதான் வீட்டில் இருந்தாள்.இந்தத் தனிமைதான் அவளைப் பாடாய்ப்படுத்தியது.அவளுக்குள் எந்த அளவிற்கு அச்சம் நிறைந்திருந்ததோ அந்த அளவிற்கு அவளுக்குள் குற்றஉணர்வும் அவளைக் கொடுமைப்படுத்தியது.

ஆச்சி சொன்னபடி ராஜாவைக் கூப்பிட்டு அவனிடம் வீட்டில் உள்ளவர்கள் என்ன சொல்லியிருந்தார்கள் என்பதை எடுத்துச்சொல்லி
அவனுக்கு எச்சரிக்கை செய்திருந்தால் அவனும் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் தானும் சூதனமாகப் பார்த்து நடந்திருப்பான்.எனப் பலவிதமாக தனக்குள்ளே ஏதேதோ எண்ணி விடை தேடிக் கொண்டிருந்தாள்.

இனி அவனோடு பேச முயன்றால் அது இன்னொரு பிரச்சனையை உருவாக்கிவிடும்.இரண்டு குடும்பங்களுக்கும்  இடையே வெறும் வாய்ச்சண்டை ந்டந்திருந்தால்கூட ஓரளவுக்கு நிலைமை மாறி சமாதானம் ஏற்படவும் வாய்ப்பு இருந்திருக்கலாம்.ஆனால் நிலைமை அப்படியில்லை அடிதடி வீண் வாய்ப் பேச்சு என சண்டை உச்ச கட்டத்தைத் தொட்டுவிட்டது.
எனவே இனி என்ன மேற்கொண்டும் விளையுமோ! எதிர் கால உறவு எப்படி அமையுமோ! என கமலா நேர் எதிர் விளைவுகளை பற்றி மிகவும் விலாசமாகவே சிந்தித்தாள்.

இந்த நிலையில் அவள் இன்னொன்றையும் யோசிக்காமலில்லை.சம வயதுள்ள ஆணும் ஆணும் பழகினாலும் பெண்ணும் பெண்ணும் பழகினாலும் சமுதாயம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் போது ஆணும் பெண்ணும் பழகினால் மட்டும் சமுதாயம் ஏன் ஏற்றுக்கொள்ள அஞ்சுகிறது?சமுதாயத்தைப் பார்த்துத் தனக்குள்ளே கேள்வி கேட்டுக்கொண்டாள்.

யாருடைய கேள்விதான் இச்சமுதாயத்தை இன்றைய அவசரத்திற்கு மாற்றி விடும்?.பெண் விடுதலைப் பற்றிப் பேச இனி எத்தனை பாரதியும் பெரியாரும் பிறந்து வர வேண்டியிருக்குமோ தெரியவில்லையே!பாவிகள் என்னைப் படிக்கவிடாமல் பூட்டி வைத்து விட்டனர்.என் வளர்சியிலும் வாழ்க்கையிலும் என்னை ஏன் சுயமாகச் சிந்திக்கத் தடை போடுகிறார்கள்.
என்னுடைய எதிர்காலம் பற்றி மற்றவர்கள் முடிவு எடுப்பதில் நிசமாகவே என்ன நன்மை ஏற்பட்டுவிடும்?
அது எந்தவிதத்தில் நியாயமுமாகும்?அவரவர் வாழ்வை அவரவர்தான் தீர்மானிக்க வேண்டும்.
அதுதான் சரியாகவும் இருக்கும்.

ஏனிந்த ஆச்சி இப்படி யோசிக்கிறாள்.அம்மாவும் அப்பாவும் கூட ஓரளவுக்கு படித்தவர்கள்.அவர்கள் கொஞ்சம் யோசிக்கிறார்கள்.
ஆனால் இந்த ஆச்சிதான் பழைய பஞ்சாங்கம்.குடும்பம் வீடு என்ற எல்லைகளைக் கடந்து யதார்த்தங்களை பார்க்க பயந்துகொண்டு அவள் இன்னமும் பழமைக்குள் ஒளிந்துகொண்டு வெளியில் வரமறுக்கிறாள்.

யாருக்காகவும் நான் ஏன் என்னுடைய உரிமைகளை விட்டுக்கொடுத்துப் போக
வேண்டும்.எனக்கென எனக்குள்ள உரிமைகள் காத்திருப்பதை நான் ஏன் தட்டிக்கழிக்க வேண்டும்?என நியாயங்களை தனக்குள்ளே நீதிமன்றம் அமைத்துத் தானே வழக்காடுகிறாள்.

அப்போது மேலைக்காற்று சுழட்டி அடிக்கிறது. அலமாரியிலிருந்து ஒரு புத்தகம் படபடத்துக்கொண்டு பறந்துவந்து சில பக்கங்களை விரித்து ஏதோவொரு பக்கத்தை தேர்வுசெய்து விரிப்பதுபோல் விரிக்கின்றது.அதில் பாரதியின் வரிகள் காற்றின் வலிமைக்கு ஈடு கொடுத்து என்னைப் படித்து எழுச்சி பெறுக!மடமை விட்டுக் கடமை உணர்ந்து வெளியே வா!உனக்கான உரிமைகளைத் தட்டிப்பறிக்கப் பிறந்தவர் எவரும்இல்லை.நீ உன்னை எவருக்காகவும் மாற்றிக் கொள்ளவேண்டாம்.

உன்னைத்தான் நான் தேடுகிறேன்.நான் பாடும் புதுமைப்பெண் நீதான்.இதோ என்னை விரி!படி என்பதுபோல் கமலாவின்முன் தன்னை படித்துக்காட்ட புதுமைப் பெண்எனும் பெண்மையாம் கண்ணகியின் வீர உணர்வைத் தட்டி எழுப்பும் வண்ணம் அவனுக்குள் அன்று கனன்ற அந்த விடுதலை உணர்வின் வேகப் பாய்ச்சலில் துடித்துவந்த துள்ளும் உணர்வுள்ள துடிக்கும் வரிகளைப் பளிச்சென அவள் கண்கள் கொத்திக்கொள்ளும் விதத்தில் விரித்துக் காட்டினான் காற்றிலே விசையாகி பறந்துவந்த பாரதி.

வரிகளின் விலாசமே அவளைக் காந்தம்போல் கவர்ந்து ஈர்த்தன.தன் கண்களை அகலவிரித்து அள்ளிப்பருக அனுமதித்தாள்.பாரதியே பாவையாகி கமலாவுக்குள் வந்து புகுந்து கொண்டவனாய் கமலாவை தன் கவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டான் மகா கவி பாரதி.

'"புதுமைப் பெண்
மாதர்க்குண்டு சுதந்திரம் என்றுநின்அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் 
திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிருளாம்.        
அறி யாமையில் அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல்பெண்ணற
மாகுமாம் உரைப்பது கேட்டிரோ!

இவ்வரிகள் அவளை விட்டு விடுதலையாகு எனத்
தூண்டும் ஒளியாய் பிரகாசித்தது.அவளுக்குள் ஒரு
புத்துணர்வு எழுந்து அவளை உசுப்பியது,

(தொடரும்}'


கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 15 January 2025

கரிசல் காவியம் 6

கரிசல் மண்ணில் ஒரு காவியம்.

அத்தியாயம் 6

ஆச்சிக்கு எங்கள் நட்பின் மீது ஒரு விதமான பயம் கலந்த சந்தேகம் உருவாகத் தொடங்கி விட்டது.ஆரம்பத்தில் எங்களுக்குள் இருந்தது நட்பா காதலா என எங்களுக்கு அடையாளம் கண்டுபிடிக்கத் தெரிந்திருக்கக் கூடிய அளவிற்கு அறிவு முதிற்ச்சி இல்லை.எங்கள் இருவரின் உறவினர்களின் வீணான சந்தேகக் கட்டுப்பாடு கெடுபிடிகளால்தான் எங்களுடைய உறவில் என்ன இருந்தது.எது இல்லாதிருந்தது என்பதை எங்களை யோசிக்க வைத்தது.அந்தத் தேடல்தான் நட்பைத் தாண்டி காதல் எனும் இன்னும் ஆழமான புனிதமான உயிரில் கலந்த சொந்தமாக உணரச்செய்தது.

இதில் கமலாவின் குடும்பம்தான் அதிகமான எதிர்ப்பைக் காட்டியது.கமலா ஒரு பெண் எனும் பயம் மட்டும் அவர்களிடம் மேலோங்கி இருந்திருக்குமானால் அது ஒரு இயல்பான அச்சம் அல்லது அக்கறை எனச்சொல்லலாம்.ஆனால் அந்தக் காரணம் இரண்டாம் பட்சம்தான்.அவர்கள் முதன்மையாக எடை போட்டுப்பார்த்தது என்னுடைய சாதியையும் பொருளாதாரச் சூழலையும்தான்.எல்லாவகையிலும் நான் அந்தக் குடும்பத்தைவிடத் தாழ்ந்தவன் என்பதுதான் கமலாவின் குடும்பத்தாரிடம் அதிகமான கவலையாக இருந்தது.இந்த வித்தியாசம் ஒரு வேளை சமரசம் ஆகி இருக்குமானால் அன்று எங்கள் நெருக்கத்தில் எந்தப் பிரச்சனையும் இருந்திருக்காது என்பதே என் நம்பிக்கை.

ஆகவே எங்களின் கள்ளமில்லா அன்பை அது பிஞ்சாக இருக்கும் போதே நறுக்கி விடவேண்டும் என அவள் வீட்டில் ஆச்சியின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் கூடி ஒரு முடிவை எட்டியது.அதாவது ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடித்து என் குடும்பத்தை வம்புக்கு இழுத்து வாய்ச்சண்டைகள் உருவாக்கத் திட்டம் தீட்டினர்.

எங்கள் வீட்டில் நாங்கள் இரண்டு ஆடுகளும் நான்கு கோழிகளும் வளர்த்தோம்.கிராமத்தில் ஏழைகளின் அவசரப் பொருளாதார உதவிகளுக்கு இந்த ஜீவன்கள்தான் உதவும்.எங்கள் ஆடுகள் அவள் வீட்டின் சவர் ஓரமாகத்தான் படுத்துக் கிடக்கும்.கோழிகளும் அவள் வீட்டு முற்றத்தில்தான் அடிக்கடி போய் அங்கு சிந்திக்கிடக்கும் அரிசி பயறுகளை கொத்தித்தின்னும்.அந்தப் பொல்லாக்கிழவி இதைச்சரியான சாக்காகக் கண்டறிந்து என் அம்மாவோடு சண்டை இழுத்தாள்.

‘அடியே முத்தம்மா ஓங் ஆடு ரெண்டும் ஏங் சொவர ஒரசி ஒரசி கரச்சி இடிச்சிரிச்சடி.நீதாங் கண்ட கண்ட பயகளோட சாவகாசம் வச்சிருக்க.ஓங் வீடு இடிஞ்சாலும் அவனுக கட்டிக் குடுப்பானுக.எங்க சொவரு இடிஞ்சா எவண்டி கட்டிக் குடுப்பாங்.வந்த பயலுக்கு கோழி அடிச்சிப்போட ஏங் வீட்ல மேச்சிதாங்
வளக்கனுமாக்கும்” என என் தாயாரின் நடத்தையை களங்கப்படுத்தும் நோக்கில் கிழவியின் சண்டை என்னைக் குறி வைத்துத்தான் அவள் வார்த்தைகளை அள்ளி வீசினாள்.

காரணம் அந்த சண்டைக்குள் என்னை இழுக்கவேண்டும் என்பதற்காகவே என் தாயாரின் நடத்தையை உண்மைக்கு மாறாக இழித்துப் பேசினாள்.பொதுவாக கிராமங்களில் சண்டை என்றாலே கணவனை இழந்த பெண்களை மிகவும் மட்டமாக வாய்கூசாமல் கேவலப்படுத்திப் பேசுவதுதான் இன்றும் வழக்கமாக இருக்கிறது.ஒரு பெண் அவள் தன் கணவனை இளம் வயதில் இழந்து விட்டால் அது ஒரு சாபக்கேடுதான்.பாவம் என் அம்மா.அப்படியே கூனிக்குறுகி விம்மி விம்மி அழ ஆரம்பித்துவிட்டாள்.அதைப்பார்த்து என் மனம் பொறுக்கவில்லை.

வேறு வழியில்லை.நானும் களத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.தாயைப்ப் பழித்துப் பேசும் போது யார்தான் பொறுத்துக்கொள்ள முடியும்.நானும் நேற்றுவரை ஆச்சி என்று அழைத்த மரியாதையான சொல்லை  கொஞ்சம் மாற்றிப் பேசவைத்து விட்டாளே அந்தக் கூறு கெட்டக் கிழவி என எண்ணும்போது என் மனம் வேதனைப்படுகிறது.

ஆமாம் நானும் என் உச்சமான கோபத்தில் சொற்களைக் கொட்டிவிட்டேன்.
“ஏய் கிழவி!வார்த்தையைக் கொஞ்சம் அளந்து பேசு.உனக்குத்தான் பேசத் தெரியுமுன்னு பேசாத.அப்புறம் நாங் பேச ஆரம்பிச்சா ரொம்ப அசிங்கமாப் போயிரும்.நீ பெரிய மனுசி பேசிட்டே .ஆனால் நாங் சின்னப்பய.நாங் பேசிட்டா ரொம்ப மானக்கேடா ஆயிரும்” என தொடக்கத்தில் வார்த்தைகளைப்  பக்குவமாகத்தான் பேசினேன்.ஆனால் கிழவியின் வேகம் கொஞ்சமும் குறையவே இல்லை.அவள் ஒரு முடிவோடுதான் சண்டையைத் துவக்கி இருக்கிறாள்.ஆகவே அவள் தொட நினைக்கும் உச்சத்தைத் தொடாமல் விடுவதாகத் தெரியவில்லை.

ஏண்டா உங்க ஆத்தா ரொம்ப யோக்யமோடா!ஆத்தாளப் பேசுன ஒடன கோபம் பொத்துக்கிட்டு வருதோ!வயசான கெழவனுக்கு வாக்கப்பட்டு அவங் எப்பச்சாவான்னு காத்திருந்தா.அவங் எங்கடா செத்தாங் இவதானடா அவனக் கொன்னா.இப்போ இளவட்டப் பயகளாப் பாத்துப் பாத்துப் புடிக்கிறா.எவங் வாராங் எவங் போறான்னு எல்லாக் கூத்தையும் நாங்களும் பாத்துக்கிட்டுத்தான இருக்கோம்.இந்தத் தேவடியா பொலப்புத் தெரியாதாக்கும்.”என மீண்டும் கொடுமையான கடுஞ் சுடு சொற்களை அள்ளி இறைத்தாள்.
     
என் பொறுமை என்னையும் மீறி அறிவை இழந்தது.ஆத்திரம் யோசிக்க மறந்தது.நான் என்ன செய்ய முயல்கிறேன் என்பது எனக்கேவிளங்கவில்லை.
கோபக் கொதிப்பில் குணம் மாறியது.புத்தி கெட்டு கோட்டியன் போல் வெறி உச்சி முட்டியது.விஷம் ஆனது என் வெகுளித்தனம்.என்னைக் கட்டுப்படுத்த இயலாத எனக்குள் ஒரு மிருகத்தனம்.சிந்தை தொலைத்தேன்.அப்போது என்ன நடந்தது என்று இப்போது நினைத்தாலும் புரியாத புதிராகவே உள்ளது.

அய்யய்யோ அளவிட முடியாத அப்படியொரு வேகம்! அவ்வளவு பெரிய கல்லை நான் எப்படித்தான் ஒரு அட்டைக்ககல்லை தூக்குவதுபோல் அலக்காகத் தூக்கிநேனோ தெரியவில்லை.ஆச்சரியமான விளைவுதான் அது.யாரும் எதிர் பார்க்காத துயரம்.அப்படியே அந்தக் கல்லை கிழவியின் மீது ஒரே போடாகப் போட்டுவிட்டேன்.

“அட சண்டாளா!என்னையக் கொன்னுட்டயே”ன்னு பாவம்! கிழவி  தரையில் சாய்ந்தாள்`

(தொடரும்)


அடுத்த தொடர் 25/1/2014

Saturday, 11 January 2025

பொறுமையுடன் வாழ்க!

பொறுமையுடன் வாழ்க

பிழைக்கத் தானே  உலகம்.
உழைக்கத் தானே  உடலும்.
கவலைக் கென்ன தேவை.
கவனம் பண்ணு வாழ்வை.!

தன்பலம் எழுப்பிடு.
பின்புலம் மறந்திடு.
வெறும் பேச்சு விலக்கிடு.
பொறுப்பாச்சு புறப்படு.

வரவினை நினைவிடு.
செலவினைக் கணக்கிடு.
வீணான ஆடம்பரம்.
தானாளும் சங்கடம்.

திட்டமாய் அடியெடு.
எட்டுவதைக் குறியிடு
கிடைப்பதில் நிறைந்திடு.
அடைவுக்குள் அளவிடு.

நிலையினை உணர்ந்திடு
விலையினை தேர்ந்திடு
கடன்படா உரம் நடு
உடன்படு வரம்பொடு.

பெருமைக்கு மாவிடிப்பு.
வறுமைக்குள் மூழ்கடிப்பு.
பொறுமையுடன் வாழ்வது.
அருமையது தேர்வது.

கவிஞர்.கொ.பெ.பிச்சை யா.

Thursday, 9 January 2025

கரிசல் காவியம் 3

கரிசல் மண்ணில் ஒரு காவியம்.
அத்தியாயம் 3
வாசலைத் தாண்டி நான் உள்ளே செல்ல எனக்குள் துணிவு இல்லை.ஏன் அந்த அச்சம். அது எனக்கு விளங்கவில்லை ஆனாலும் அவளுடைய புதிய தோற்றம் அவள் முன் என்னை அவளைவிடச் சின்னவனாக குறுக்கிவிட்டது.அவளிடம் அந்தக் குறும்புத்தனம் மறைந்திருந்தது.அவள் முகமே புதுப்பொலிவாய் சொலித்தது.என்னிலும் வயது கூடிப் பெரியவளாகத் தோன்றினாள்.பாவாடை சட்டை மாறி கூடுதலாகத் தாவணி அவள் பருவ மாற்றத்தை விலாசம் காட்டியது.ஏனோ தெரியவில்லை அவளை போடி வாடி என அழைக்க மனம் துணியவில்லை.என்னை அறியாமலே அவள் மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது.அவள் பெரிய மனிசி ஆகிவிட்டாள் வயதுக்கு வந்துவிட்டாள் என்ற சொற்களுக்கான விளக்கம் இப்போது எனக்குப் புரிகிறது.

.அப்போது எனக்கு வயது பதினான்கு.அவளுக்கும் அதே வயதுதான் ஆனாலும் அவளுக்குள் தெளிந்த அந்த முதிற்சி எனக்குள் வளற்சி இல்லை.அதுதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தலைமுறை இடைவெளி.ஆணைவிட பெண்ணுக்கு அனுபவ ஞானம் வேகமாக வளர்கிறது என்பதும் அறிவியல் உண்மை.அதனால்தான் ஆணைவிட பெண்ணுக்கு திருமண வயது குறைவாக இருக்கவேண்டும் என அக்காலப் பெரியவர்கள் கண்டறிந்து சொன்னார்கள்.குறைந்த பட்சம் பெண்ணைவிட ஆணுக்கு ஐந்து முதல் பத்து வயது அதிகம் இருந்தால்தான்.ஆணுக்கும் பெண்ணுக்கும் அனுபவ ஞானம் சமநிலை ஆகும் என்பது பழமை கணித்த கணக்கு.ஆணைவிட பெண்ணுக்கு வயது இடைவெளி அதிகமான நிலையில் அவர்களுக்குள் புரிதல் இடைவெளி அதிகரிக்கும்.இதைதான் ஆங்கிலத்தில் ஈகோ என்று சொல்வார்கள். அப்படியான நிலையில்தான் குடும்பத்தில் சில சமயங்களில் பிரச்சனைகள்,குழப்பங்கள்.ஏற்படும்பொழுது அவர்களால் அதைச் சமாளித்துச் சரிக்கட்டி அனுசரித்து இணைந்து வாழ முடியாமல் பிரிய வேண்டிய கட்டாய சூழலுக்குள் அநேக தாம்பத்ய உறவுகள் தள்ளப்படுகின்றன.
எங்களுக்குள் நீண்ட நேர விவாதம் இப்படித்தான் நீண்டன.
 
ஏய் உள்ள வாலே.....ஆச்சி வந்தால் என்ன சொல்வாள்.......அவட்ட நாங் சமாளிச்சுக்கிறேன்........`நீ வாலேஅவள் துணிச்சலாக என் கையைப்பிடித்து இழுக்கிறாள்.ஆனால் நான் பயத்தில் அவள் கையைத் தட்டுகிறேன்.

ஏல ஒன்னுமில்லல........எங்க வீட்ல நேத்து பணியாரம் செஞ்சாங்க........ரெண்டத் தாரேன் சாப்பிட்டுப் போலமீண்டும் என் கையைப்பிடித்து உள்ளே இழுக்கிறாள்.
வேண்டாம்..........நாங் இங்கேயே நிக்கிறேன்..........நீ போயி எடுத்துட்டு வா..........ஆச்சி பாத்தா..வையும்..........எனக்குப் பயமா இருக்கு.........என்ன விடு எனப் பதறிய மொழியில் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லுகிறேன்.
 
சரி இவங் வேலைக்கு ஆகமாட்டான்என எண்ணி அவளே அலுத்துக்கொண்டாளோ என்னவோ,விடுவிடுன்னு வீட்டுக்குக்குள்ளே போனாள்.ரெண்டு பணியாரத்தை எடுத்துக்கொண்டு வந்தாள்`”இந்தா......போல....பயந்தான்கொள்ளிப் பயல..நீ..உன்ன என்ன நாங்......அவிச்சா தின்னுடப் போறேன்.....பேசி ரொம்ப நாளாச்சே ..பேசலாமுன்னுதான கூப்பிட்டேங்.......இப்படிப்பயந்து சாவுரஎன சலித்துக்கொண்டே அவளும் வெளியே வந்து அந்த முருங்கை மரத்தைக் கட்டிப்பிடித்துச் சுற்றினாள்.

நாங் பனியாரத்தை தின்னாமல் கையில் வைத்துப்பார்த்துக் கொண்டே நின்றேன்.என்னைக்கவனித்த அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை.கலகலவெனச்சிரித்தாள்.
ஆமா..ஏஞ் சிரிக்கிற.....உனக்கு கொஞ்சங்கூட பயமே இல்லயாநானும் பேச ஆரம்பிச்சேன்.
அட போடா களிமண்ணு.....ஆமா என்னல பயம் உனக்கு,.......ஏண்டா இப்படி ஆயிட்ட......என்னல ஆச்சு உனக்கு.என என்னை ஏளனம் செய்து மீண்டும் சிரித்தாள்.
 
வேறொன்னுமில்ல உங்க ஆச்சியக் கண்டாத்தாங் எனக்குப் பயமா இருக்கு....கமலா பெரிய மனிசி ஆயிட்டா ..அவட்ட இன்னுமே நீ பேசக்கூடாதுன்னு எங்க அம்மாவும் சொல்லிட்டா ..அதான்.............

அதாங் பயந்துட்டயாக்கும்....அடப்போடா முட்டாள்....பெரியவங்க இருக்கும் போது அப்படி இருந்துக்க வேண்டியதுதாங் ....அவங்க இல்லாத போது இப்படி நாம பேசிக்க வேண்டியதுதாங்.எனப் பெண்ணுக்கே உரிய புத்திசாலித்தனமாகவும் பேசினாள்.அப்போது அவள் அறிவை வியந்து பாராட்டும் பக்குவம் இல்லை.அதை இப்போது எண்ணும் போது எனக்குப் பொறாமையாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது.என்ன இருந்தாலும் சமயோசிதப் புத்தி என்பது பெண்களுக்குக் கொஞ்சம் அதிகம்தான்.அதனால்தான் பெண்ணுக்குப் பின் புத்தி என்பார்கள்.ஆமாம் அவள் பின்னும் பின்னும் என அவள் புத்தி விரிந்து கொண்டே பெருகும்.அதனால் பெண்கள் அவ்வளவு எளதில் ஏமாந்துவிடமாட்டர்ர்கள்.

விடுதலையான கூண்டுக்கிளிபோல் என்னையே மகிழ்ச்சியில் பார்க்கிறாள்.நேரிலே பூக்கும் மல்லிகைபூவாய் சிரிக்கிறாள்.ஆனந்தக்களிப்பில் அந்த முருங்கை மரத்தைப் பாடாய் படுத்துகிறாள்.என்ன செய்வது அவள் புரிந்து கொண்டதை நான் புரிந்து கொள்ளவில்லையே.அவள் வயதுக்கு வந்து விட்டாள்.நான் அப்போது இப்போது போல் விவரமாக இல்லையே.இப்போது அந்நிகழ்வை நினைக்க நினைக்க எனக்கே கேவலமாக இருக்கிறது.கள்ளமில்லா அந்தப்பிள்ளைப் பருவத்தை எண்ணிப்பார்க்கும் போது பெருமையாகவும் இருக்கிறது.இறைவன் செய்யும் விந்தை அது.வளரும் பருவத்தில் அதை ஒளித்து வைத்து வாழும் பருவத்தில் அள்ளித்தருகிறான்.இறைவன் எவ்வளவு பொறுப்பானவன் பார்த்தீர்களா?எதை எதை எந்த எந்த பருவத்தில் மறைக்க வேண்டுமோ அதை அதை அந்த அந்த பருவத்தில் மறைத்தும் உணர்த்தியும் விந்தை செய்யும் அவன் சிறப்பே சிறப்பு.

அந்த முருங்கை மரத்தை அவள் சுற்றி சுற்றி ஆடுகிறாள்.நான் எட்டிநின்றுதான் வேடிக்கை பார்க்கிறேன்.

கொ.பெ.பி.அய்யா


.(தொடரும்)